|
பக்கம் 1 / 2 நீண்ட நேரமாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கவனித்த சங்கப்பிள்ளை 'என்னா வேணும்' என்று கேட்டதும் அவன் அழுத்தமாய் 'ர்ர்ரத்தம் ' என்றான். பதிலுக்கு சங்கப்பிள்ளையும் அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தர்றேன் என்பதாய்த் தலையாட்டினார்.
'இங்க ஒரு ஒன்ர கிலோ! சொல்லி அர மணி நேரமாச்சி' சலிப்போடு சொன்னது ஒரு குரல்.
'தலக்கறி ஒரு முக்கால் கிலோ போடுப்பா' என்றது இன்னொரு குரல்.
மிதிவண்டியில் வந்த ஒருவர் வண்டியிலிருந்து இறங்காமல் காலூன்றி நின்றுகொண்டே,
”ஈரல் இருக்கா ...?”
”ஈரல் ஆயிப்போச்சி, கொடலு வேணும்னா இருக்கு”
சொல்லிக்கொண்டே பிறை போல் உள்நோக்கி வளைந்திருந்த கத்தியால் கடகடவென மாட்டின் நெஞ்செலும்புகளைத் துண்டாக்கிக் கொண்டிருந்தார். மனைவி கறியை நிறுத்துப் போடுவதும் காசு வாங்குவதாகவும் இருந்தாள். கடையில் கூட்டம் அலை மோதியது. சங்கப்பிள்ளை எப்பொழுதும் இளம் கன்றுகளைத்தான் கறி போடுவார். அதனாலேயே கடையில் கூட்டமாக இருக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு சொல்லவே வேண்டாம்.
நல்ல கொழுத்த கன்றாய் இருக்கக்கூடும். இரத்தம் காயாமல் தொங்கிக்கொண்டிருந்த இரண்டு சப்பைகளும் பருத்துப் பெரியதாய் இருந்தன. மணிமாறனும் கால்மணி நேரமாய் காகிலோ காகிலோ என சொல்லிக் கொண்டிருந்தான். இப்பொழுதுதான் கறிக் கடைக்காரனுக்கு கேட்டிருக்கும்போல;
'ஏண்டா... செல்லம்மா மவனே காகிலோ போதுமாடா...'
'போதும். எனக்கும் எங்க அக்காவுக்கும் மட்டுந்தான். எங்கம்மா கறியெல்லாம் திங்காது' வெள்ளந்தியாய்ச் சொன்னான்.
அரைக்கிலோ ஒருகிலோ என்னும் சலசலப்புகளுக்கு ஊடாக கறியை வெட்டிக்கொண்டே,
'ஏண்டா... ஒங்கம்மா சாராயமெல்லாம் குடிக்கிது. கறி மட்டும் திங்காதாக்கும்; ஆமா... சாராயத்துக்கு என்னத்தத் தொட்டுக்கும்மா....? சங்கப்பிள்ளை சிரித்துக் கொண்டே கேட்டான். கறிவாங்க நின்று கொண்டிருந்தவர்களும் கலுக்கென சிரித்துவிட்டார்கள். அவர்களின் சிரிப்பு மணிமாறனை காயப்படுத்தியது. முகம் சுருங்கி சிறுத்தது. கறியை வாங்கிக் கொண்டு இறுகிய முகத்துடன் வீட்டை நோக்கி விருவிருவென நடந்தான்.
செல்லம்மா சேலையை முழங்கால் வரைக்கும் சுருட்டி கால்களை அகற்றி நீட்டிக்கொண்டு, கூரையை ஒட்டியிருந்த அம்மியில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தாள். விறகுக் கட்டைகளைப் போலவே அவளது கால்கள் கறுத்துக் கிடந்தன. வேகமாக வந்த மணிமாறன் விருட்டென வீட்டுக்குள் நுழைந்தான். நுழைந்த வேகத்தில் மூங்கில் குச்சியில் இடித்துக் கொண்டவன் 'அம்மா...' என்று சத்தமிட்டவாறே தலையைத் தேய்த்துக்கொண்டான். மணிமாறனின் சத்தம் கேட்டுத் திரும்பிய செல்லம்மா.
'பார்த்து மெல்ல போமாட்ட... வாசப்படியில குனிஞ்சி போன்னு எத்தன தடவ சொன்னாலும் ஒனக்கு ஏறாது. பொடச்சுக்கப் போவுது தலையை தேச்சிவுடு'
மணிமாறன் அம்மா சொன்னதைக் கேட்டும் கேட்காதவனாகத் தலையைத் தேய்த்துக்கொண்டே வீட்டுனுள் கறியை வைத்தான். ஏற்கனவே அவன் முகம் வாடியிருந்ததைக் கவனித்திருந்த செல்லம்மா, 'மணி...மணி...' என இரண்டு முறை கூப்பிட்டதும் எட்டிப் பார்த்தான். மணிமாறனைப் பார்த்தவள்,
'யாண்டா... உம்முன்னு இருக்க! யாங் என்னாச்சி...?
<< முதல் < முந்தைய 1 2 அடுத்த > கடைசி >> Last update : 30-12-2008 00:26
|