|
பக்கம் 1 / 2 பத்தி எழுதுகின்ற பலத்தை ஒரு படைப்பாளி மனோ நிலையிலிருந்து தான் பெறுகின்றேன். ஒரு படைப்பாளி மொழியின் பொருளை உருவாக்குகின்றான். ஏற்கனவே தேய்ந்து, தன்னை இழந்து பொருள் மாறிப் போன வார்த்தைகளை மதிப்பு ஏற்றப் பார்க்கின்றான். ஆதிக்க மனோ நிலைகள் பொருள் மாற்றி வாசிக்க வைத்திருக்கும் விசயங்களை உண்மையான பொருளில் சிந்திக்க வைக்கின்றான். கவிதையில் தொடர்ந்து அப்படி சந்தித்த விசயங்கள் வாழ்க்கையிலும் பொருள் மாறிப்போன வார்த்தைகளை தேடக் கற்றுத் தந்திருக்கின்றது என்று நம்புகின்றேன். அப்படி அதிகம் எனை யோசிக்க வைத்த விசயம் "இலவசம்". அதுவும் அரசியலில் பேசப் படுகின்ற "இலவசம்" எனும் சொல்.
இன்று அரசியல் என்ற வார்த்தையின் பொருள் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் நிர்வாகம் என்பது போய் இலவசங்களால் உருவாகும் அரசாங்கம் என்பதாய் மாறிப்போயிருக்கின்றது. எனது நிர்வாகத் திறமையால் இந்த சீர்கேடுகள் சரி செய்யப்படும், வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும் என்பது அரசியல்வாதிகளின் வாக்குறுதியாய் இருந்திருக்கவேண்டும் என்பது மிக எளிதாக சாதுர்யமாக மறக்க வைக்கப்பட்டிருக்கின்றது. அறிவிக்கப்படுகின்ற இலவசங்கள்தான் நிர்வாகத்தை நடத்தப் போகின்றதா? எதிர்கேள்வி எதுவுமின்றி பொது சனம் எப்படி வாழப் பழகிற்று? சரி, இலவசம் எனும் வார்த்தையின் பொருள் என்ன? என்னிடமிருந்து எதுவுமே பெற்றுக் கொள்ளாமல், நீங்கள் எனக்கு ஏதாவது உங்களுடையதைத் தருகிறீர்கள் என்றால் அது இலவசமாகும். இலவசங்களாகச் சொல்லப்படுபவை அப்படியா தரப்படுகின்றன?
தரப்படுபவை எல்லாமே நம் வரிப் பணத்தில் நிர்வாகத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியத்திலிருந்து அந்த நிதியமும் ஒவ்வொரு மனிதனின் இரத்தமும் வேர்வைத் துளியாய் மாறிய தருணத்தில் சேகரிக்கப்பட்டது. அந்த நிதியத்திற்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. சனங்களின் அடிப்படைத் தேவையை நிர்வாகத் திறமையால் முறையாக பாரபட்சமின்றி வழங்குவது.
என்னிடமிருந்து எதுவுமே பெற்றுக் கொள்ளாமல், நீங்கள் எனக்கு ஏதாவது உங்களுடையதைத் தருகிறீர்கள் என்றால் அது இலவசம் உணவு, உடை, உறையுள், கல்வி, மருத்துவம், பாதுகாப்பு இப்படி எத்தனையோ விசயங்களில் முறையான நிர்வாகம் வழங்குவதன் மூலம் கடைக்கோடி மனிதனின் தேவையும் நிறைவேற்றப் பட்டு விட்டால் இலவசம் எனும் பெயரில் யாரும் யாருக்கும் பிச்சை போட வேண்டிய அவசியமே இருக்காதே. அவற்றை ஒழுங்கு செய்ய முடியாதவர்கள் "இலவசங்களய்" அறிவிக்கிறார்கள். அவர்கள் கைப்பணத்திலிருந்து பெருந்தன்மையாய் மக்களுக்கு வழங்குவது போல் பேர் வாங்கிக்கொள்ளப் பார்ப்பது எவ்வளவு பெரிய மோசடி.
இலவச பொருட்களைக் கட்சியனரே வாங்கிக் கொள்வதை அதிக பட்ச மோசடியாகப் பார்க்கும் நமது பொதுப்புத்தி "இலவசம்" எனும் வார்த்தைக்குள், கடைத்தேங்காயை எடுத்து கடைக்காரனுக்கே இலவசமாய் வழங்குவதாய் பெருமை சொல்லுவது போன்ற நம்மிடமே நடக்கும் மோசடி பற்றி யோசிக்கத் தவறிவிடுகின்றது.
<< முதல் < முந்தைய 1 2 அடுத்த > கடைசி >> Last update : 27-11-2008 00:54
|