|
பக்கம் 1 / 2 1970-களின் பிற்பகுதியில் பேராசிரியர் கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோர் முதன்மைப்படுத்திய முற்போக்குத் தடங்களைப் பதிவு செய்த ‘அலை’ என்னும் இதழில் எழுதத் தொடங்கி, இன்று வரை பல்வேறு இதழ்களில் பங்களிப்பைச் செய்து கொண்டிருப்பவர் அ.யேசுராசா. எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர் என அறியப்பட்ட அ.யேசுராசாவுக்கு இலங்கை அரசு, தேசத்தின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான கலா கீர்த்தி என்னும் விருதை 2005-ல் வழங்கியது. (இங்கே குடியரசுத் தலைவர் வழங்குகிற பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளின் மட்டத்துக்கு எண்ணப்படுவது). கலாகீர்த்தி விருதை ஏற்க மறுத்த யேசுராசா, அதற்கான காரணத்தை விளக்கி அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அக்கடிதம் மேதமை என்பதின் முழுப்பரிமாணத்தையும் உணர்த்துகிறது. மேதமை என்பது, அறிவு நிலைச் செயல்பாடு மட்டுமேயல்ல, மானுடச் செயல்பாடு இணைந்ததும் ஆகும். இலக்கிய மாண்பை விட, மனித மாண்பு மேலானது என்பதை உணர்த்துவதோடு, எழுத்தாளர் எவ்வாறு இயங்கவேண்டுமென்ற முன்மாதிரி உண்மையையும் எடுத்து வைக்கிறது கலாகீர்த்தி விருதை மறுத்த யேசுராசாவின் பதில்;
“கலை இலக்கியத் துறையில் செயற்பட்டு வருபவனான எனக்கு, மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் கலா கீர்த்தி விருது வழங்கப்படவுள்ளதைத் தெரிவிக்கும் கடிதம் கிடைக்கப் பெற்றது. முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயினும் இரண்டாந்தரப் பிரஜை என்ற உணர்வுடனேயே வாழத் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வரப்படும் தமிழ் மக்களில் ஒருவன் என்ற வகையில், கசப்பான இந்த யதார்த்த நிலை மீது கவனத்தைக் குவியச் செய்யும் பொருட்டு, கலா கீர்த்தி விருதைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இனங்களில் சமத்துவமற்ற நிலைமை பல தளங்களிலும் நிலவி வருவதுதான், இன்று இலங்கையில் நாமெல்லோரும் எதிர்கொள்ளும் அவலங்களுக்கான நெருக்கடிகளின் அடிப்படை என்பது எல்லோராலும் உணரப்படவேண்டியது; அந்த நிலைமையை மாற்றுவதற்குரிய நேர்மையான வெளிப்படையான செயற்பாடுகளே இக்கால கட்டத்தில் இன்றியமையாதனவாய் உள்ளன. இனப் பாரபட்சமான நடவடிக்கைகள், நிலைகள் பற்றிய விரிவான விளக்கத்தினை தவிர்க்கிறேன். எனினும் தங்களின் விருது பற்றிய அறிவிப்புக் கடிதம் கூட எனது தாய்மொழியான தமிழில் அமைந்திருக்கவில்லை என்பதைக் கவலையுடன் அறியத் தருகிறேன். தனது மேலான நோக்கங்களின் பொருட்டு அரசின் உயர் விருதுகளை முன்பு ஏற்றுக் கொள்ள மறுத்த சகோதர சிங்களக் கலைஞர்களான பிரசன்ன விதாகே, அசோக விஹர்த்த ஆகியோரின் முன்னுதாரணத்தை இவ்வேளையில் மதிப்புக்குரிய செயலாக நினைவு கூறுகிறேன்”.
இலங்கையில் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் பலருக்கு கலா கீர்த்தி, சாகித்ய ரத்னா போன்ற விருதுகள் இதன் முன்னர் வழங்கப்பட்டுள்ளன. இவைகளை இனப் பாரபட்சம், சுயமரியாதை போன்ற புள்ளிகளிலிருந்து பெற்றுக் கொள்ள மறுத்த முன்னுதாரணங்களை எந்தத் தமிழிறிஞரும் விட்டுச் செல்லவில்லை. சித்தன் போக்கு சிவன் போக்கு என்று தன்னிச்சையான தீர்மானங்களிலிருந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டார்கள். அதன் காரணமாகவே அ.யேசுராசா விருதைப் பெறாது புறந்தள்ளிய சிங்கள அறிவுலகச் செயற்பாட்டாளர்களின் உதாரணங்களைத் தந்தார். இவ்வாறான முக்கிய வரலாற்றுப் புள்ளிகள்தாம் மேதைகள் செயற்படுவதற்குரிய தருணங்கள். கடமைகளை மக்களுக்கு ஆற்றுவதற்கான வாய்ப்பை எழுத்தாளர், கலைஞன், சிந்தனையாளன் போன்ற தனிமனிதப் பாத்திரங்களுக்கு வரலாறு ஏற்படுத்தித் தருகிறது. தன் மக்களுக்கு நேர்வது தானே தனக்கும் நேர்கிறது என்ற சமூகப் பொறுப்போடு, பொதுக்காரணியோடு இத்தகைய பாராட்டுக்களைத் தவிர்த்தல் என்பது இங்கும் தமிழிலக்கிய உலகில் நடைபெற்றதில்லை.
யேசுராசா ஆற்றிய வரலாற்றுக் கடமையை ஒப்பிடுகையில், சிவத்தம்பி, சின்னத்தம்பியாகி விட்டார். சின்னத்தம்பி மேலே போய்விட்டார்.
பிரான்சின் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து அல்ஜீரியா போராடிக் கொண்டிருந்தது. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து பலப்படுத்துமாறு இளைஞர்களை அரசு அழைத்தது. விடுதலைக்குப் போராடும் அல்ஜீரிய மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டோம் என்ற இளைஞர்களின் மறுப்பை நியாயமானது என வரவேற்றார் சாத்தரே. பிரான்சில் வாழுகிற வதைபடும் அல்ஜீரியர்களுக்கு ஆதரவாக அரசின் கொடுமைகளைக் கண்டித்து வெளிப்படையாகப் பேட்டி தந்தார் ஜீன்பாழ் சாத்தரே. அவர் கைது செய்யப்படுவாரா என பிரெஞ்சு அதிபர் துகேலிடம் கேட்ட வேளையில்,
“கைது செய்ய மாட்டோம். சாத்தரேயைக் கைது செய்வது பிரான்சு தேசத்தைக் கைது செய்வதாகும்” - எனப் பதிலளித்தார். அறிவுக்கம்பீரத்தின் குறியீட்டை அடக்கிவைத்தால், அது தேசத்தின் கரும்புள்ளியாகி விடும் என்று உணர்ந்து கொண்டதால் ஒதுக்கம் கொண்டது பிரெஞ்சு அதிகாரம். ராணுவத் தளபதியாயிருந்து அதிபரான சார்லஸ் துகேல் எழுத்து மேதமைக்கு அளித்தது போன்ற ஒரு மதிப்பை - இங்குள்ளோரிடம் எதிர்பார்க்க முடியாது. எழுத்துலகில் கருத்துக்கள் எந்த அடிப்படையிலிருந்து பிறப்பெடுத்து வருகின்றன, எந்தக் கோணத்தில் வைக்கப்படுகின்றன, அவர்களின் அல்லது அக்கருத்துக்களின் சமூக மதிப்பு யாது என மதிக்கத் தெரிந்த ஒருவராக தமிழக முதல்வர் கருணாநிதி இல்லை. இருந்திருந்தால் செம்மொழித் தமிழ் மாநாட்டு அறிவிப்புச் செய்ததுமே சிவத்தம்பியின் வேண்டுகோளுக்கு செவி கொடுத்திருப்பார். பேராசிரியர் சிவத்தம்பியின் நிலைப்பாடு தொடக்கத்தில் வேறொன்றாக இருந்தது. “மாநாட்டில் நான் கலந்து கொள்வேனா என்ற கேள்வி இப்போது எழவில்லை. இப்போதைய கேள்வி என்னவென்றால் இலங்கைத் தமிழர் பேரவலத்தைத் தீர்க்க கலைஞர் என்ன செய்யப் போகிறார் என்பதுதான். இந்த வினாவுக்கு கலைஞர் சரியான முறையில் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்” (அக்டோபர் 19, 2009 தமிழ் ஓசை).
அவருடைய நம்பிக்கைக்கு, நேர்கேள்விக்கு எந்த விடையும் இதுவரை அளிக்கப்படவில்லை. இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றிருந்தும், பதவி நலன்களுக்காக அந்த ஆற்றலைப் பயன்படுத்தாத ஒருவரை பேரா.சிவத்தம்பி போலவே நாமும் அடையாளம் கண்டோம்; இனத்தை அழித்து விட்டு அந்த இனம் பேசும் மொழியை வளர்ப்பது எவ்வாறு என்று மனச்சாட்சியுடன் பெரும்பாலோர் கேள்வி எழுப்பினோம். ஆனால் சிவத்தம்பியின் இரண்டாவது கட்ட நிலைப்பாடு “கலைஞர் கருணாநிதி போன்ற ஒரு நல்ல தமிழறிஞர் தலைமையில் நடைபெறுகிற மாநாட்டைப்” வரவேற்பதாக அமைந்தது. மாநாட்டில் கலந்து கொள்வதில் அவர் உறுதியாய் இருப்பதாக சமீபத்தில் கொழும்பு சென்ற என்னிடம் நண்பர்கள் தெரிவித்தார்கள்.
பேராசிரியர் சிவத்தம்பி தம்முடைய முதல் நிலைப்பாட்டில் உறுதியாகத் தொடர்ந்திருந்தால், அவரைப் போன்ற பிற தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் தம் உள்ளக்கிடக்கைகளை தொடர்ந்து வெளிப்படுத்தியிருப்பார்கள். வெளிப்படுத்தியிருந்தால் தமிழ் மேதைமைகளை முறித்துக் கொண்டு மாநாட்டினை நடத்திட வேண்டுமா என்ற மீள்பரிசீலனைக்கு கருணாநிதி வந்திருக்கக்கூடும். சாத்தரேயிடம் பிரெஞ்சு அதிபர் ஜெனரல் சார்லஸ் துகேலுக்கு ஏற்பட்டது போன்றதொரு மதிப்பு-இந்தத் தமிழிறிஞர்கள் பற்றி மாநாட்டு ஏற்பாட்டாளருக்கு நிகழ்ந்திருக்கும். ஆனால் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான நொபாரு கொராஷிமா உலகத் தமிழ்மாநாட்டுக்கு ஒப்புதல் அளிக்காமல், தம் நிறுவனத்தின் தற்சார்பு நிலையை உறுதிப்படுத்தியதோடு, தம் புலமைத் தகுதியையும் காத்துக் கொண்டார். இங்குள்ள தமிழ்ப் புலமைகளோ செம்மொழித்தமிழ் மாநாட்டுக்குப் பின்னுள்ள உண்மையான காரணிகளைக் கண்டறிந்து தம்முடைய தகுதியை நிலைப்படுத்திக் கொள்ளவில்லை.
“இவ்விடத்தில் என்னுடைய நிலைப்பாடு அரசியல் அல்ல. தமிழ்மொழி வளர்ச்கிக்கான ஆதரவு என்பதைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று மாநாட்டில் கலந்து கொள்ள உறுதி பூண்டார். (குமுதம் 18.11.2009).
செம்மொழித் தமிழ் மாநாட்டுக்குப் பின்னாலுள்ள அவரது சொந்தமண்ணின் பூதாகரமான இனப்படுகொலை அரசியலை ஒதுக்கி அதிலிருந்த தன்னை விலக்கிக் கொண்டார் சிவத்தம்பி. தமிழ் வளர்ச்சிக்கென்று இங்கு என்ன நடக்கிறது? அடிப்படை மக்களுக்கு அன்றாட வாழ்வில் பயன்படாதவாறு - வாழ்வுப் போட்டிகளில் அவர்கள் முன்னேற முடியாதவாறு அவர்களைத் தடுத்து நிறுத்தி - ஆங்கிலத்தால் பிரமாண்ட வசதிகள் பெறும் ஒரு மேட்டுக்குடியினர், உயர் நடுத்தர வர்க்கத்தினர் உருவாக்கப்பட்டனர். அவர்களுக்கான ஊட்டச் சத்தாக கல்வி ஆக்கப்பட்டுள்ளது; சமச்சீர் கல்வியில் தமிழ் பயிற்று மொழி இல்லை. தாய்மொழி பயிற்று மொழியாக இல்லாத கல்வியில் சமச்சீர் எப்படி நிலவும்? அரசு அலுவலகங்களில் இன்னும் தமிழ் உள்ளே நுழையவில்லை. அது ஆங்கிலத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் சாதாரணனும் உள்ளே நுழைய முடியவில்லை. நீதிமன்றங்களில் தமிழில்லாததால், அங்கும் தமிழன் இரண்டாந்தரக் குடிமகனானான். தமிழன் இல்லாமல் தமிழனைத்தாண்டி ஒரு தமிழ் வளர்ச்சி எங்கிருக்கும்?
<< முதல் < முந்தைய 1 2 அடுத்த > கடைசி >> Last update : 01-02-2010 08:10
|
|
|