|
நெல்லை எனது சொந்த ஊர் என்றாலும் அந்த ஊரில் எனது வாழ்நாள் அவ்வளவாக கழிந்ததில்லை, ஆரம்ப காலம் சேலம் அதன் பிறகு எல்லாம் மதுரை, சிறகு விரித்து பறக்க நினைத்தபோது மும்பை வானம் எனக்கு இடம் கொடுத்தது. அதனால் எனது சொந்த ஊர் அந்நியமாக பட்டதில் எனக்கு ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. நான் பல முறை எனது ஊரை புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன். ஆம் பிறர் சொல்லித்தான் எனது ஊரின் பெருமை எனக்குப் பட்டது. இருப்பினும் எனது ஊர் எனக்கு எப்போதும் ஒரு அழகான அனுபவத்தையே கொடுத்தது. அது ஈரமான மழைக்காலம் என்றாலும் சரி அனல் கொதிக்கும் கோடைகாலம் என்றாலும் சரி. இது இரண்டும் கொட்டான் காலம், எனது வீட்டு வயல்களில் நெற்கதிர்கள் அறுப்பதற்கு தயாராகிகொண்டிருந்தது. வாய்க்கால்களில் தண்ணீர் தனது பணியை முடித்து ஓட்டத்தை நிறுத்தி இருந்தது. குளங்கள் இனி தங்களுக்கு மவுசு என கரைகளின் ஓரங்களில் தன்னுள் ஒளித்து வைத்திருந்த துணி துவைக்கும் கல்களை மெல்ல வெளியே காண்பித்து இங்கே வாருங்கள், என்னுடன் உறவாடுங்கள் என ஏங்கி கொண்டிருந்தது. இது ஒரு சக்கரம், மீண்டும் குளம் வற்றும், கோடை வரும் வாய்க்கால் காய்ந்து போகும், மழை வரும் வாய்க்காலில் தண்ணீர் வரும், மீண்டும் குளம் நிரம்பும், வயல்கள் தனது பச்சைப் பட்டை உடுத்தி மீண்டும் அழகு பார்க்கும்.
இது நெல்லையின் வாழ்க்கை என்றாகிவிட்டது. இந்த சக்கரத்தின் இடையில் ஒளிந்திருக்கும் எதையாவது எடுத்து பார்த்தால் அதன் ஆச்சர்யம் அளவில்லாமல் போய்விடும்.அப்படி ஒரு புதுமையைத்தான் பாலா நான் கடவுளில் கொடுத்து இருக்கிறார். வாழ்க்கை சக்கரத்தில் நம் கண் முன்னால் நடந்தும் நாம் கண்டு கொள்ளாமல் விட்ட ஒரு வாழ்க்கை. நெல்லையில் நான் பார்த்த இரண்டாவது படம் இது. முதல் படம் குணா. எந்தப் படத்தை பற்றியும் கொஞ்சமாவது என்னை அறியாமல் அசை போட்டு விடுவேன். நண்பர்கள் மூலமாக எப்படியும் கதையின் ஓட்டம் தெரிந்து விடும். அதன் பிறகு படம் பார்க்கையில் மனதுக்குள் அடுத்த காட்சிகள் தன்னாலேயே ஓடிவிடும். தசவதாரம் படம் பார்க்கும்போது எனக்கு அந்த படத்தை பல முறை பார்த்த நினைவை வரவைத்து விட்டன.
ஆனால் நான் கடவுள் அப்படி அல்ல, நெல்லை ராம் தியேட்டர் திரை மேலே எழும்பும் வரை எனக்கு நான் கடவுள் இசை இளையராஜா, அதன் நாயகன் ஆரியா என்பதை தவிர ஒன்றும் தெரியாது. படத்தின் ஆரம்பம் காசியில் துவங்கியது. நான் பலமுறை சென்ற இடம். நான் பழகிய அகோரி சாமியார்களை படத்தில் காண்பித்திருக்கிறார்கள். அவர்களை பற்றி ஒரு முறை தமிழக பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது பிணங்களுடன் உறவு கொள்வார்கள் என்று எனக்கு கோபம் வந்தது. தி.க. கூட இப்படி பேசாது பாவம். அப்படி என்னத்தான் கோபமோ அகோரிகள் மீது வாழ்க்கை போரடித்து விட்டதா சாமியாராகு, சாமியாராகி போரடித்து விட்டதா அகோரியாக மாறு இதுதான் சூத்திரம். ஆமாம், அகோரி சூத்திர சுபாபங்கள் கற்ற சாமியாரல்ல. ஆனால் சூத்திர சுபாபங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். பல அகோரிகள் தங்கள் வாழ்நாளில் கங்கையை தவிர வேறு ஒன்றையும் பார்த்ததே கிடையாது. ஆனால் பிரபஞ்சத்தை பார்த்ததாகக் கதை விடுவார்கள். அப்படி ஒரு "அகோரியை தென்னகம் அழைத்து வந்து அபலை பெண்ணிற்கு முக்தி கொடுக்கும் கதைதான் அகம் பிரம்மாஸ்மி(நான் கடவுள்)" இந்த ஒரு வரிதான் கதை. எவனோ ஒரு மடச்சாம்பிராணி ஜோஸ்யகாரன் சொன்னான் என்று தனது குழந்தையை காசிக்கு கொண்டு சென்று விடுகிறார் ஒரு அதிபுத்திசாலி அப்பா (ஆர்யாவை பார்த்த உடனே தனது மகன் என்று கண்டு கொண்டாரே). காசிக்கு போய் தேடிப்பிடித்து மீண்டும் ஊருக்கு அழைத்து வருகிறார். இங்குதான் நான் அன்றாடம் காணும் ஒரு வாழ்க்கையை முழுமையாக படம்பிடித்து காட்டி இருக்கிறார் பாலா. மனது கணக்கிறது, இப்படி ஒரு வாழ்க்கையா என்று. ஆம்! இப்படியும் ஒரு வாழ்க்கை என்று நாம் ஒத்து கொள்ளத்தான் வேண்டும்.படத்தின் ஆரம்ப டைட்டில்களில் பல ஊனமுற்றோர் இல்லங்களுக்கு நன்றி சொல்லும்போது நினைத்தேன், இந்த படத்தில் ஏதோ ஒன்று உள்ளது என்று. ஆனால் ஏதோ ஒன்று அல்ல, அனைத்தும் உள்ளது என்று ஆகிப்போனது. படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் காசி பிராமண குடும்பம் முதல் இறுதியில் வரும் மலையாள லேண்ட்லார்ட் வரை அனைவரையும் சுத்தமாக வேலை வாங்கிவிட்டார்.காட்சிக்கு காட்சி அழுத்தம் தரும் வசனங்கள் இல்லை. ஆனால் அழுத்தம் தரும் உண்மைகள் வசனங்களை விழுங்கி விட்டது. அந்த உண்மைகளை இளையராஜாவின் இசைகள் நமது உள்ளங்களில் ஓட விட்டுள்ளது. படம் பார்க்கும் சாதாரண மனிதரின் இதயங்களில் இந்த படத்தின் தாக்கம் கடைசிவரை இருக்கும் என்றால் அதற்கு காரணம் ராசையா என்னும் மாமனிதன், ( அழகி என்னும் படத்தில் ‘என் குத்தமா உன் குத்தமா’ என்ற ஒரு பாட்டில் அந்த படத்தின் ஆரம்பகால ஓட்டங்களை வைத்து நடைமுறை வாழ்க்கையையும் கொடுத்து இருப்பார்). அது நாம் நாள்தோறும் கண்ட ஒரு வாழ்க்கை. இந்த படம் நாம் கண்டும் கவனிக்காமல் போனது. பிச்சைக்காரர்களின் காலை அவர்களின் மதிய உணவு, இரவு கால சோகம், சந்தோசம் நிறைந்த உறக்கம் என அவர்களது வாழ்க்கையை இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த திரையை விலக்கி காண்பித்து விட்டார்.இதற்காகத்தான் ஒரு அகோரி கொஞ்சம் மசாலா கதை, பாடல்கள்,ஆரம்பத்தில் வரும் ஓம் சிவ ஓம் காசியை நமது கண்முன் காண்பித்தது. பிச்சை பாத்திரம் நாம் சில நிமிடம் கடக்கும் சில நபர்களின் வாழ்க்கையை காண்பித்தது, அதே போல் மாதா உன் கோவிலில், அம்மா உன் பிள்ளை நான், ஒரு காற்றில் அலையும்
அனைத்து பாடல்களும் நமக்கு முன் ஒரு வாழ்க்கையை காண்பித்திருக்கிறது. இந்த படத்தில் நடித்த ஒரே ஒருவரை மட்டும் கூறி இவர் நடிப்பு சூப்பர் என்று சொன்னால் அவர் படம் பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம், அது மவுனச் சாமியாராகட்டும், பாவம் செய்துவிட்டேன் என்று அந்த சாமியாரிடம் அழுது வடியும் ஏஜெண்டாக இருந்தாலும் சரி, கர்ண கொடுர? முதலாளியாக இருந்தாலும் சரி (ஒரு கையில் ஊறுகாய் பாக்கேட்டை சப்பிகொண்டே சாராயம் குடிக்கும் ஸ்டைல் (நெல்லை சந்திப்பின் அருகில் உள்ள டாஸ் மார்க்கில் இந்த காட்சியை நேரில் பார்த்தேன்). குருவி பிஸ்கட்டை கண்டவுடன் சிரிக்கும் பாலகனாலும் சரி, நயன்தாரா வேடத்தில் வந்து காவல் நிலையத்தில் ஆடுபவரானாலும் சரி, அவரை ஆடசொல்லி வேண்டும் லாக்கப் கைதியானாலும் சரி, அந்த துயரத்திலும் நையாண்டி செய்யும் பிச்சைக்கார குழுவானாலும் சரி, போலீசுக்கு பயந்து வேசம் போட்டு இருக்கிறோம், நடு ராத்திரியில் சங்கு ஊதி நம்மை காட்டி கொடுத்து விடுவானோ என்று சொல்லும் போலி சாமியார்கள் ஆனாலும் சரி, அந்த இருக்கமான வாழ்க்கையிலும் திருமண ஆசை வந்து தாலியை கட்டும் பெண் ஆனாலும் சரி, மவுன சாமியாரை பார்த்து நீயெல்லாம் ஒரு சாமியா என்று வையும் திருமங்கை ஆனாலும் சரி, மலையாள ஏஜெண்டாக வருபவரானாலும் சரி, குருட்டு பெண் பூஜாவானாலும் சரி, ஆர்யாவானாலும் சரி அனைவரும் இந்த படத்தில் வாழ்ந்துள்ளார்கள்.
படம் விட்டு வெளியே வருகிறேன். முன்னால் சென்று கொண்டிருந்த பெண்களின் டயலாக் "சாமி படம்னு பார்த்தா வெறும் பிச்சைகாரங்களல்ல காண்பிக்கிறாங்கா. சாமியார் ஒன்னுமே பண்ணாம அந்த குருட்டு பெண்ணை கொண்ணுபுடிச்சுடி. ஆமாண்டி நானும் மந்திரம் போட்டு அந்த பொண்ணுக்கு கண்ணு கொடுக்கும்னு பார்த்தேன்"
அட! நம்ம திருநெல்வெலிக்குள்ளதான் இருக்கிறோம் என்ற உண்மை மீண்டும் தெரிய வந்தது. பாலா சார்! இது படமல்ல பாடம்!
- சரவணா
Last update : 09-03-2009 04:15
|
|
|
hi
By: appavi () on 10-03-2009 00:11